உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வங்கி பெயரில் போலி வரைவோலை தயாரித்த திருச்சி நபர் சிக்கினார்

வங்கி பெயரில் போலி வரைவோலை தயாரித்த திருச்சி நபர் சிக்கினார்

ஆவடி: எஸ்.பி.ஐ., வங்கி பெயரில் போலி வரைவோலை தயாரித்து, 1.47 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்ற கும்பலில், ஒருவர் கைது செய்யப்பட்டார். திருச்சி, மணச்சநல்லுாரைச் சேர்ந்தவர் அன்பழகன், 42; மரக்கடை வியாபாரி. இவர், கடந்த 2023ல், கொளத்துாரில் உள்ள நிர்மல் - வர்ஷா தம்பதியின் 'அக்குபஞ்சர்' கிளினிக்கில் சிகிச்சைக்காக வரும்போது, அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வாயிலாக, சந்துரு, குணசேகரன் ஆகியோர் பழக்கமாகி உள்ளனர். ஐந்து பேரும் ஒன்று சேர்ந்து, குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, அன்பழகன், எஸ்.பி.ஐ., வங்கி பெயரில் 2023 ஜூலை 7ம் தேதியிட்டு, 1.47 கோடி ரூபாய்க்கு போலி வரைவோலை தயார் செய்துள்ளார். அதை சந்துருவிடம் கொடுத்து, அவரது பெயரில் செங்குன்றத்தில் உள்ள ஹெச்.டி.எப்.சி., வங்கியில் செலுத்தி உள்ளனர். மயிலாப்பூரில் உள்ள வங்கி கிளையில் அந்த வரைவோலையை சோதனை செய்தபோது, அது போலி என தெரிந்தது. இதுகுறித்து, செங்குன்றம் ஹெச்.டி.எப்.சி., வங்கி கிளை மேலாளர் டெரிக் லெஸ்லி ஸ்டீவன்ஸ், கடந்தாண்டு ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். விசாரித்த இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த திருச்சியைச் சேர்ந்த அன்பழகனை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே சந்துரு, குணசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், நிர்மல் - வர்ஷா தம்பதியை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை