உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நுாற்றாண்டு பூங்கா ஜிப்லைன் கோளாறு இரு பெண்கள் 20 நிமிடம் சிக்கி தவிப்பு

நுாற்றாண்டு பூங்கா ஜிப்லைன் கோளாறு இரு பெண்கள் 20 நிமிடம் சிக்கி தவிப்பு

சென்னை:கலைஞர் நுாற்றாண்டு பூங்கா 'ஜிப்லைனில்' ஏற்பட்ட கோளாறு காரணமாக இரு பெண்கள், 20 நிமிடங்கள் சிக்கித் தவித்தனர்.தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையில், தோட்டக்கலைத் துறை வாயிலாக, 46 கோடி ரூபாயில், கலைஞர் நுாற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 6.09 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் இசை நீரூற்று, பனிப்பாதை, அலங்கார நடைபாதை, கண்ணாடி மாளிகை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளது.பூங்காவை சுற்றி பார்ப்பதற்கு சிறிய ரயிலும், 'ரோப் கார்' போன்று 'ஜிப்லைன்' வசதியும் செய்யப்பட்டு உள்ளது. நாள்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று மாலை ஜிப்லைனில், திடீர் கோளாறு ஏற்பட்டது. இதில் சிக்கி, 20 நிமிடங்கள் வரை, இரு பெண்கள் தவித்தனர். கோளாறை சரி செய்ய முடியாததால், வேறு வழியின்றி அவர்களை, கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.இதனால், பூங்காவில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.இதுகுறித்து, பூங்காவில் ஜிப்லைன் இயக்கும் முகமது பைசல் என்பவர் கூறியதாவது:ஜிப்லைன் கருவி, ஈர்ப்பு விசை அடிப்படையில் இயங்குகிறது. அதிக எடையுள்ளவர்கள் இதில் ஏறினால் வேகமாக செல்லும்; சற்று எடை குறைந்தவர்கள் ஏறினால், தாமதமாக செல்லும். சில நேரங்களில் எடை குறைந்தவர்கள் ஏறும் போது நின்றுவிடும். அப்போது, கயிறை சற்று அழுத்தி தள்ளினால் மீண்டும் இயங்கும். அதுபோல் இப்போதும் நடந்துள்ளது. எதிர்காற்றின் வேகம் அதிகம் இருந்ததும் இதற்கு காரணம். ஜிப்லைன் பாதுகாப்பானது. சர்வதேச அளவிலான சான்றிதழும் ஜிப்லைனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பை உறுதி செய்ய பழனிசாமி வலியுறுத்தல்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:முதல்வர் ஸ்டாலின், தன் தந்தை கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த ஐந்தே நாட்களில், ஜிப்லைன் பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் அந்தரத்தில் சிக்கி மீட்கப்பட்டுள்ளனர். அரசு வாயிலாக திறக்கப்பட்ட பூங்காவிற்கு நம்பி வரும் பொதுமக்களின் உயிரோடு, பாதுகாப்பாற்ற உபகரணங்களை கொண்டு தி.மு.க., அரசு விளையாடுவது கண்டனத்திற்குரியது. இந்த பூங்காவை முழுதும் சுற்றிப்பார்க்க, 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக, தி.மு.க., அரசு கட்டணம் வசூலிக்கிறது. எனவே, பூங்காவிற்கு வரும் மக்களுக்கு, உரிய பாதுகாப்பை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ