உள்துறை செயலர் கார் மீது மோதிய வேன் பறிமுதல்
சென்னை:உள்துறை செயலர் தீரஜ்குமார் கார் மீது மோதி, நிற்காமல் சென்ற மினி வேனை மடக்கிப்பிடித்து, அதன் ஓட்டுநரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.தமிழக அரசின், உள்துறை செயலர் தீரஜ்குமார் பணி முடித்து, தலைமை செயலகத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு பகுதியில் உள்ள வீட்டிற்கு, பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சென்றார்.இவரது கார், அரும்பாக்கம் பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த மினி வேன் ஒன்று, தீரஜ்குமார் காரின் பக்கவாட்டில் மோதி நிற்காமல் சென்றுள்ளது.தகவலறிந்து, அண்ணா நகர் போக்குவரத்து போலீசார், மதுரவாயல் பகுதியில் அந்த மினி வேனை மடக்கிப்பிடித்தனர். அதில், நிப்பான் பெயின்ட் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய மினி வேனை, போலீசார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். அதன் ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.