சினிமா படங்கள் எடுக்க பண மோசடி செய்தோம்: கைதான பெண் வாக்குமூலம்
சென்னை சென்னையைச் சேர்ந்த ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களை நடத்திவந்த ஆல்வின், ராபின் ஆகியோர் சினிமா படங்கள் எடுக்க, பொதுமக்களிடம் இருந்து, கோடிக்கணக்கில் முதலீடு பெற்றுத் தந்ததாக, கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை முகப்பேரில், ஆல்வின், 32, அவரது சகோதரர் ராபின், 28, ஆகியோர், ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தனர். அவர்கள் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக, 60 கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, புழல் பகுதியைச் சேர்ந்த பானுவள்ளி, 56, அம்பத்துார் சுஜாதா, 51, ஆவடி திவ்யா, 36, புழல் சந்தோஷ், 35, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களில் சுஜாதா, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்: எங்கள் பகுதியைச் சேர்ந்த லீமாரோஸ் என்பவர் 'வின் ஸ்டார்' என்ற நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ராபினுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. இதனால் அவர், ராபின் மற்றும் ஆல்வின் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளர் பொறுப்பை ஏற்றார். இவர் தான் எங்களையும் மோசடி நிதி நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார். ராபின், ஆல்வின் ஆகியோருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என, ஆசை இருந்தது. இதற்காக சினிமா படங்கள் எடுக்கவும் முடிவு செய்தனர். இது தொடர்பாக, முன்னணி நடிகர், நடிகையரை வரவழைத்து நிகழ்ச்சியும் நடத்தினர். சினிமா படங்கள் எடுப்பதற்காக, ராபின், ஆல்வின் மற்றும் லீமா ரோஸ் ஆகியோர் விதவிதமான திட்டங்களை வகுத்து தருவர். அந்த வகையில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், தினமும், 1,500 ரூபாய் வீதம், 200 நாட்களுக்கு தரப்படும். 50,000 ரூபாய் முதலீடு செய்தால், தினமும், 3,500 ரூபாய் தரப்படும். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 9,000 ரூபாய் தரப்படும் என்றெல்லாம் கூறி, லீமா ரோசுடன் கூட்டு சேர்ந்து முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் பெற்று மோசடிக்கு உடந்தையாக இருந்தோம். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.