உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இதய அறுவை சிகிச்சையில் பெண் பலி எம்.ஜி.எம்., மருத்துவமனை மீது புகார்

இதய அறுவை சிகிச்சையில் பெண் பலி எம்.ஜி.எம்., மருத்துவமனை மீது புகார்

அமைந்தகரை, இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சையால் பெண் பலியான நிலையில், பொய்யான வாக்குறுதி அளித்து, எம்.ஜி.எம்., மருத்துவமனை ஏமாற்றிவிட்டதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.நெற்குன்றத்தை சேர்ந்தவர் கணேசன், 65. இவரது மனைவி பிரபாவதி, 54. தம்பதிக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.பிரபாவதிக்கு இதய வால்வு பிரச்னைக்காக, அமைந்தகரை எம்.ஜி.எம்., மருத்துவமனையில், இம்மாதம் 8ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அன்று காலை 11:00 மணி முதல் மாலை 6:25 மணி வரை இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.பின், ஐ.சி.யூ., வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், இரவு 11:30 மணிக்கு, பிரபாவதி இறந்ததாக டாக்டர்கள் கூறினர். தவறான சிகிச்சையால்தான் பிரபாவதி இறந்ததாக, மருத்துவமனை நிர்வாகத்திடம் குடும்பத்தினர் வாக்குவாதம் செய்தனர். அமைந்தகரை போலீசிலும் நேற்று காலை புகார் அளித்தனர். போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.இதுகுறித்து, பிரபாவதியின் மருமகன் அருண் கார்த்திக் கூறியதாவது:இதய வால்வு மாற்று சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்படலாம் என, மற்றொரு மருத்துவமனை கூறிய நிலையில், பாதிப்பு வராது என, எம்.ஜி.எம்., மருத்துவமனை நிர்வாகத்தினர் பொய்யான நம்பிக்கை அளித்து, அறுவை சிகிச்சை செய்தனர். இதில், என் மாமியார் இறந்துவிட்டார். தவறான வாக்குறுதி அளித்து, சிகிச்சை செய்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

சிகிச்சையில் குறைபாடு இல்லை

எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: பத்மாவதிக்கு ஏற்கனவே, மற்றொரு தனியார் மருத்துவமனையில் இதய பாதிப்புக்கான ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 'மிட்ரல் வால்வு' கடுமையாக பாதித்திருப்பது கண்டறியப்பட்டது.இதைத்தொடர்ந்து, எம்.ஜி.எம்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, 'மிட்ரல்' வால்வு சீரமைப்பு சிகிச்சையை வெற்றிகரமாக மருத்துவ குழுவினர் செய்தனர்.பின், தீவிர சிகிச்சை பிரிவில், மருத்துவ கண்காணிப்பில் இருந்த பத்மாவதிக்கு, இதய செயலிழப்பு ஏற்பட்டு, உடல்நிலை கவலைக்கிடமானது. தீவிர சிகிச்சை மற்றும் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் பலன் அளிக்கவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ