| ADDED : நவ 28, 2025 05:24 AM
சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மூன்று பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். சிங்கபெருமாள் கோவில் அடுத்த காச்சேரிமங்கலம் ஏரியில், முகத்தில் வெட்டுக் காயங்களுடன், 20 வயது வாலிபர் நேற்று இறந்து கிடந்தார். தென்மேல்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் புகாரின்படி, சிங்கபெருமாள் கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இறந்த வாலிபர், செங்கல்பட்டு அடுத்த பரனுாரை சேர்ந்த ஆகாஷ், 20, என தெரிந்தது. இதையடுத்து சந்தேகத்தின்படி, கூடுவாஞ்சேரி அடுத்த காரணைபுதுச்சேரியை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து, விசாரித்து வருகின்றனர். கஞ்சா விற்பனை மோதலால், ஆகாஷ் கொலை நடந்ததா, வேறு காரணம் ஏதும் உள்ளதா என, போலீசார் விசாரித்து வருகின்றனர். எல்லை பிரச்னை கொலை நடந்த பகுதி சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் ஆகிய மூன்று காவல் நிலையங்களை உள்ளடக்கியது. இதனால், இது எங்கள் எல்லைக்குள் வராது என போலீசார் நழுவ பார்த்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் எல்லையை உறுதி செய்தபின், சிங்கபெருமாள் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.