| ADDED : ஜூலை 16, 2011 12:50 AM
பேரூர் : தினமலர் செய்தி காரணமாக, மருதமலை ரோடு விரிவாக்கப்பணி ஜரூராக நடந்து வருகிறது. வடவள்ளி கருப்பராயன் கோவில் முதல் காளிதாஸ் தியேட்டர் வரை, 1,500 மீட்டர் அளவுக்கு, மருதமலை ரோட்டை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த, மாநில நெடுஞ்சாலைத்துறை பணிகளை மேற்கொண்டது. இதையடுத்து, ரூ. 3.25 கோடி மதிப்பீட்டில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் துவங்கின. இதற்காக, கருப்பராயன் கோவில் முதல் காளிதாஸ் தியேட்டர் வரை குழிதோண்டும் பணிகள் துவங்கின. ஆனால், திடீரென பணிகள் துவங்கிய வேகத்திலேயே முடங்கின. இதனால், மருதமலை ரோட்டில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. இது குறித்து, தினமலர் நாளிதழில், கடந்தவாரம் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மருதமலை ரோட்டில், ரோடு அகலப்படுத்தும் பணி ஜரூராக நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில்,''மருதமலை ரோட்டின் இருபுறமும் நான்கு மீட்டர் அகலப்படுத்தப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் பணிகள் தாமதமாகின. இன்னும் நான்கு மாதத்துக்குள்ளாக பணிகள் முடிக்கப்பட்டு விடும்,''என்றார்.