| ADDED : ஜூலை 14, 2011 09:21 PM
ஆனைமலை : வன விலங்குகளால் பயிர்கள் சேதம் அடைந்தால் விவசாயிகள் செய்யவேண்டியது குறித்து வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வனச்சரக அலுவலர் வீரமணி கூறியதாவது: வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் யானைக்கு பிடித்தமான சோளம், வாழை, தென்னை போன்றவைகள் அதிக அளவில் பயிரிடப்படுவதால் அவை விவசாய நிலங்களை தேடிவருகின்றன. யானைகள் பயிர்களை சேதப்படுத்தினால் விவசாயிகள் முதலில் வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். விவசாயிகள் முதலில் விவசாயப்பயிர்கள் சேதமானது குறித்து விண்ணப்பம் வனச்சரக அலுவலருக்கு கொடுக்கவேண்டும். விண்ணப்பத்தில் நிலப்பரப்பின் அளவு, சேதமடைந்த அளவு, விவசாய நிலம் யாருடையது, சேதப்படுத்தப்பட்ட பகுதியின் உரிமையாளருடன் சேதமடைந்த பகுதியும் சேர்த்து போட்டோ ஆகியவை இணைக்கவேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் நில உரிமை சான்றும், சேதப்பகுதியில் என்ன பயிர் செய்யப்பட்டுள்ளது என்பதற்கான சான்றும் கிராம நிர்வாக அதிகாரியிடம் பெற்று இணைக்கவேண்டும். வேளாண்மைத்துறையிடம் இருந்து சேதமதிப்பு குறித்து மதிப்பீட்டு சான்றிதழ் தர வேண்டும். வருவாய்துறை அதிகாரிகளிடம் இருந்து நஷ்ட ஈடு ஏதும் வாங்கவில்லை என்பதற்கான சான்று இணைக்கவேண்டும். மேலே தெரிவித்துள்ளவற்றை நஷ்ட ஈடு கோரும் விண்ணப்பத்துடன் சேதப்படுத்திய மூன்று நாட்களுக்கும் வனச்சரக அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டும். தவறும் பட்சத்தில் ஒருவார காலத்திற்குள் கொடுக்க வேண்டும். விவசாயிகள் இவற்றை சமர்ப்பிக்கும்போது வனத்துறை உயர் அதிகாரிகள் மூலம் நஷ்ட ஈடு பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றார்.