சூலுார்: கோவை மாவட்டம் சூலுார் அடுத்த நீலம்பூரில், தனியார் கல்லுாரி அருகே மாணவர்கள் வசித்த குடியிருப்பில், கருமத்தம்பட்டி போலீசார் நேற்று அதிகாலை திடீர் சோதனை நடத்தினர்.கஞ்சா, கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அங்கு தங்கியிருந்த, தேனி, பழைய அரசு மருத்துவமனை சாலையைச் சேர்ந்த, பிரவீன் குமார், 21, நீலம்பூரை சேர்ந்த ரஞ்சித், 19, கோவில்பட்டியை சேர்ந்த ஹரி தரணி, 19, ஆகியோரை கைதுசெய்தனர்.தொடர்ந்து, சூலுார் புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடத்திய சோதனையில், 1.5 கிலோ கஞ்சா சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்., மங்கலத்தைச் சேர்ந்த நவீன்குமார், 21, துாத்துக்குடியைச் சேர்ந்த பிரகாஷ், 19, தேனி மாவட்டம், கீழவடகரை தீபக், 21, ஆகிய மூவரை கைது செய்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் 36 பேரிடம் விசாரிக்கின்றனர்.இதேபோல், கோவில்பாளையம் அருகே வையாபுரி நகரிலும் நேற்று அதிகாலை துவங்கி, மதியம் வரை 60 வீடுகளில் சோதனை நடந்தது; எதுவும் சிக்கவில்லை. சோதனை நடந்த இடங்களில் எஸ்.பி., கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது:கல்லுாரி மாணவர்கள் எனக் கூறி வாடகைக்கு வீடு கேட்டு வருவோரிடம், அவர்களின் முழு விபரங்களையும் வீட்டு உரிமையாளர்கள் கட்டாயம் பெற வேண்டும். அப்போது தான், மாணவர்கள் போர்வையில் குற்ற பின்னணி உள்ளவர்களை அடையாளம் காண முடியும்.கல்லுாரி மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துதல், குற்ற பின்னணி உள்ளவர்களிடம் தொடர்பு வைத்திருப்பது, கல்லுாரியில் குழுக்களை ஏற்படுத்தி ரவுடித்தனத்தில் ஈடுபடுவது தெரிந்தால், தயவு, தாட்சண்யம் இன்றி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.