மொபைல்போனில் மூழ்கும் பெண் பயணியர் அரசு பஸ்களில் கண்டக்டர்கள் திணறல்
பொள்ளாச்சி, ;மொபைல்போனில் மூழ்கி, அரசு டவுன் பஸ்சில் பயணிக்கும் பெண்களால், கண்டக்டர்களுக்கு பிரச்னை எழுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.பொள்ளாச்சி பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு அதிகப்படியான அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், பெண்கள், இலவசமாக பயணம் மேற்கொள்கின்றனர்.மொத்தம் பயணம் செய்யும் பெண்கள் குறித்த விபரத்தை அறியும் வகையில், அவர்களுக்கு கண்டக்டர்கள், 'மகளிர் கட்டமில்லா பயணச் சீட்டு' என அச்சிடப்பட்ட டிக்கெட்டையும் வழங்குகின்றனர். ஆனால், மொபைல்போனில் மூழ்கி, பஸ்சில் பயணிக்கும் பெண்கள், இந்த டிக்கெட்டை வாங்க தவிர்த்து விடுவதால், பிரச்னை எழுவதாக கண்டக்டர்கள் புலம்புகின்றனர்.கண்டக்டர்கள் கூறியதாவது: பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண் பயணி நின்றாலும், அவருக்காக பஸ்சை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். வயது முதிர்ந்த பெண்கள் இருக்கையில் அமர உதவி செய்ய வேண்டும். பெண்களிடம் கோபமாகவோ, இழிவாகவோ, ஏளனமாகவோ பேசக்கூடாது.பெண்கள் பஸ்சில் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணித்து பாதுகாப்பாக ஏற, இறங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிவுறுத்தல் உள்ளன.அதற்கேற்ப, கண்டக்டர்களும் கவனமாக பணிபுரிகின்றனர். ஆனால், பெண்கள் சிலர், பஸ்சில் ஏறியவுடன் மொபைல்போனில் மூழ்கி விடுகின்றனர். கூட்ட நெரிசலின்போது, கூக்குரலிட்டாலும் டிக்கெட் கேட்டு பெறுவதில்லை. திடீரென பரிசோதகர் வந்தால் முறையாக டிக்கெட் வழங்கவில்லை என, பிரச்னை எழுகிறது.அதே போன்று, இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப்பை கடந்து செல்வதை கூட அறியாமல், மொபைல்போனில் மூழ்கி விடுகின்றனர். பஸ் ஸ்டாப்பை கடந்து செல்வதை உணர்ந்ததும், திடீரென சப்தமிட்டு இறங்குகின்றனர். இதனாலும் பிரச்னை ஏற்படுகிறது.அதனால், பஸ்களில் டிக்கெட் வாங்குவதன் அவசியம் குறித்தும், பஸ் ஸ்டாப் வரும் போது கவனித்து இறங்க வேண்டும் என்றும், விழிப்புணர்வு அறிவிப்பை இடம்பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு, கூறினர்.