உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மொபைல் ரேஷன் கடை துவங்கணும்! எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை

மொபைல் ரேஷன் கடை துவங்கணும்! எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை

வால்பாறை; யானைகளிடம் இருந்து ரேஷன் பொருட்களை பாதுகாக்க, 'மொபைல்' ரேஷன்கடை அமைக்க வேண்டும் என, எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை தாலுகாவில் மொத்தம், 15,701 ரேஷன் கார்டுகள் உள்ளன. மொத்தம் உள்ள, 21 வார்டுகளில், 47 ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.வால்பாறையில் ஆண்டு முழுவதும் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எஸ்டேட் பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் நுழையும் யானைகள், ரேஷன் கடையை குறிவைத்து தாக்குகின்றன. இதனால், ஆண்டு தோறும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைவதோடு, தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களும் உரிய நேரத்தில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், யானைகள் நடமாடும் எஸ்டேட் பகுதியில், பொருட்களை இருப்பு வைக்க முடியாத நிலையில், மாதத்தில் ஒரு நாள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் குறிப்பிட்ட நாளில் பொருட்களை வாங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.ஒரே நாளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் தவியாய் தவிக்கின்றனர்.இது குறித்து, எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:வால்பாறை தாலுகாவில் யானைகள் நடமாடும் எஸ்டேட் பகுதியில், 'மொபைல்' ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் வீதம் மாதத்தில் நான்கு நாட்களாவது எஸ்டேட் பகுதியில் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும். தொலைதுார பகுதியிலிருந்து வந்து ரேஷன் பொருட்கள் வாங்கி செல்வதால் ஏற்படும் சிரமத்தை குறைக்க, அந்தப்பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.

பழங்குடியினர் எதிர்பார்ப்பு!

வால்பாறை தாலுகாவில், காடம்பாறை, கருமுட்டி, வெள்ளிமுடி, கீழ்பூனாஞ்சி, கவர்க்கல், கல்லார், சங்கரன்குடி, நெடுங்குன்று உள்ளிட்ட, 13 செட்டில்மென்ட்கள் உள்ளன. இங்கு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட, பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.இவர்கள் மாதம் தோறும் ரேஷன் பொருட்கள் வாங்க, பல கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டி நிலை உள்ளது. எனவே, வால்பாறை தாலுகாவில் உள்ள, செட்டில்மென்ட் பகுதிகளுக்கும், மொபைல்ரேஷன் கடை வாயிலாக மாதம் தோறும் ரேஷன் பொருட்கள் வழங்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பழங்குடியின மக்களின், எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி