வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மிகவும் கொடுமையான உலகம்
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கைவிடுவதில்லை. ஆனால், பிள்ளைகளால் கைவிடப்பட்டு, அனாதையாக்கப்பட்ட பெற்றோர்களின் எண்ணிக்கை, இன்றைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.--தமிழகத்தின் நகர வீதிகளில் பிச்சை எடுப்பவர்களில், பெரும்பாலானவர்கள் முதியவர்கள். இதில் கணிசமானவர்கள் பெண்கள். இவர்கள் யாரும் பிச்சை எடுத்து வாழ்வதை, தொழிலாக கொண்டவர்கள் அல்ல; பெற்ற பிள்ளைகள், உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள்.வயதான பெற்றோர்களை வீட்டில் வைத்து பராமரிக்க விரும்பாதவர்கள், அவர்களை சுமையாக நினைப்பவர்கள், கோவை போன்ற நகரங்களுக்கு அழைத்து வந்து, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கோவில்கள் போன்ற, பொது இடங்களில் விட்டு போய் விடுகின்றனர்.தள்ளாத வயதில் திக்கும், திசையும் தெரியாமல் தெருவோரங்களில் பசியோடு பரிதவித்து நிற்கும் பல முதியோர்களை, இன்றைக்கு பார்க்க முடிகிறது.உணவு, தண்ணீர் இல்லாமல் மயங்கிய நிலையில் படுத்து இருக்கும் முதியவர்கள், தன்னார்வலர்களின் உதவியால், அரசு முதியோர் காப்பகங்களுக்கு, அனுப்பி வைக்கப்படுகின்றனர்.இவர்களில் பலருக்கு பார்வை குறைபாடு, காது கேளாமை, சர்க்கரை, மிகை ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால், பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதில் வயதான பெண்களின் நிலை, மிகவும் பரிதாபமாக உள்ளது.கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள, 'ஈர நெஞ்சம்' அரசு முதியோர் காப்பகத்தில் உள்ள மூதாட்டிகள் கூறுவதை கேட்டால், கண்களில் கண்ணீர் கசிகிறது.சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில், உயிர் கொடுத்த அம்மாக்கள், தங்கள் கடைசி காலத்தில் வடிக்கும் கண்ணீரின் வெப்பத்தை, இனியாவது பிள்ளைகள் உணரட்டும்.
இந்த காப்பகத்தில் பல ஆண்டுகளாக, ஆதரவற்ற நிலையில் இருக்கும் அமுதாம்பாளுக்கு, சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஒரு மகள் இருக்கிறார். அவர் இங்கு இருப்பது தெரிந்தும் அவர் ஒரு நாள் கூட வந்து பார்த்தது இல்லை. ''எனக்குன்னு யாருமில்ல; மிச்ச காலத்தை இங்கேயே முடிச்சா போதும்,'' என்கிறார்.
துாத்துக்குடியை சேர்ந்த வசந்தா, இங்கு ஒரு வருடமாக இருக்கிறார். இவருக்கு நகைக்கடையில் வேலை செய்யும் மகன் இருக்கிறார். மகன், மகள் இருவரும் இவரை வீட்டில் வைத்துக் கொள்ள விரும்பாமல், கோவைக்கு அழைத்து வந்து, இங்குவிட்டு போய் விட்டனர். பல உடல் உபாதைகளுடன், பேச முடியாமல் தவிக்கிறார்.
ஆறு மாதங்களுக்கு முன், அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட கோவை பாப்பம்பட்டியை சேர்ந்த சரோஜினி, மருமகள் கொடுமை தாங்க முடியாமல், வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் தவித்துக் கொண்டு இருந்தவரை, யாரோ சிலர் அரசு காப்பகத்தில் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அவரை தேடி இதுவரை யாரும் வரவில்லை. பிரம்மை பிடித்தது போல், அமர்ந்து இருக்கிறார்.
மிகவும் கொடுமையான உலகம்