வெளியுலக அனுபவம்தான் வாழ்வில் உயர்வு தரும்
கோவை: கோவை மாவட்ட மைய நுாலகம் மற்றும் செம்மொழி தமிழாய்வு மன்றம் சார்பில், இலக்கிய சந்திப்பு கூட்டம், மாவட்ட மைய நுாலக அரங்கில் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு, பேராசிரியர் கீதாதயாளன் தலைமை வகித்தார். 'மனித வாழ்வை செம்மைபடுத்துவது வீட்டுலகமே வெளியுலகமே' என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடந்தது.பட்டிமன்ற நடுவராக செயல்பட்ட, அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் புவனேஸ்வரி பேசியதாவது:ஆறு பேர் இரு அணியாக இருந்து, இந்த தலைப்பில் கருத்துகளை தெரிவித்துள்ளனர். நமக்கு அன்பு சார்ந்த வாழ்க்கை, அறிவு சார்ந்த வாழ்க்கை என, இரண்டு உள்ளது. ஒரு மனிதனை அன்பும், பண்பும் உடையவர்களாக உருவாக்குவது வீடுதான். அதற்காக வீடே உலகம் என்று யாரும் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அறிவுலகத்தை இழந்து விடுவோம். வெளியுலக வாழ்க்கைதான் ஒரு மனிதனுக்கு அறிவையும், அனுபவத்தையும் தருகிறது. இந்த இரண்டும் இருந்தால்தான், சிறந்த மனிதனாக புகழ் பெற முடியும். அதனால் வெளியுலக அனுபவம்தான் வாழ்க்கைக்கு உயர்வை தரும்.இவ்வாறு, அவர் பேசினார்.