யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
வால்பாறை: வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனியாக முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.வால்பாறையில் தென்மேற்கு பருவமழைக்கு பின், கேரளாவிலிருந்து மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு வழியாக நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள், பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன.குறிப்பாக, ரொட்டிக்கடை, சோலையாறு, அக்காமலை, உருளிக்கல்,முடீஸ் முத்துமுடி, நல்லமுடி, பன்னிமேடு, வில்லோனி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.பகல் நேரத்தில் யானைகள் தேயிலை காட்டில் முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர். இரவு நேரங்களில் யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்தி வருவதால், தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.கடந்த வாரம் முத்துமுடி தேயிலை காட்டில் முகாமிட்ட யானை ஒன்று குட்டி ஈன்றது. இதனால் அந்தப்பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க வனத்துறையினர் திடீர் தடை விதித்தனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை எஸ்டேட் பகுதியில், தனித்தனியாக முகாமிட்டுள்ள யானைகள் குறித்த தகவல்களை, வனத்துறையினர் குறுஞ்செய்தி வாயிலாக தொழிலாளர்களுக்கு தெரிவிக்கின்றனர். இது தவிர யானைகள் நடமாடும் எஸ்டேட் பகுதியில், சிகப்பு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், சமீப காலமாக யானைகள் - மனித மோதல் வெகுவாக குறைந்துள்ளது.தற்போது, யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. அப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணியர், யானைகள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். யானைகள் நடமாடும் பகுதியில் தொழிலாளர்களை தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதிக்கூடாது. யானைகள் நடமாடும் பகுதியில் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வெளியில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.