காரமடை தேர் திருவிழா ரூரல் எஸ்.பி., ஆய்வு
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் ஆய்வு செய்து, கோவில் நிர்வாகத்திடம் விபரங்களை கேட்டறிந்தார். காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகத் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. நாளை (12ம் தேதி) தேரோட்டம் நடைபெற உள்ளது. இதை அடுத்து நேற்று கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன், காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு வந்தார். கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், செயல் அலுவலர் பேபி ஷாலினி ஆகியோர் வரவேற்றனர். விழா குறித்து எஸ்.பி., கோவில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவிடம் விவரங்களை கேட்டறிந்தார். தேர் எந்தந்த வீதிகள் வழியாக செல்கிறது. பாதுகாப்பு நடவடிக்கை எவ்வாறு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான மருத்துவ வசதிகள், குடிநீர், கழிப்பிடம் ஆகியவை செய்யப்பட்டுள்ளதா, என, கேட்டறிந்தார். பின்பு தேர் செல்லும் வீதிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மேட்டுப்பாளையம் டி.எஸ்பி., அதியமான், வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி கோவில், அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், குணசேகரன், ஆகியோர் உடன் இருந்தனர்.