உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சி அலுவலர்கள் ஸ்டிரைக்; பணிகள் பாதிப்பு

ஊராட்சி அலுவலர்கள் ஸ்டிரைக்; பணிகள் பாதிப்பு

அன்னுார்; ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் அறிவித்த வேலை நிறுத்தத்தால், ஊராட்சி அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பல ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும்.100 நாள் திட்ட கணினி உதவியாளர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரை பணி வரன்முறை படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திற்கு, தனி ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கனவு இல்லம் மற்றும் வீடு பழுது பார்க்கும் திட்டத்திற்கு உரிய பணியிடம் ஏற்படுத்த வேண்டும். பதவி உயர்வு வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 13ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் அழைப்பு விடுத்தது. இதையடுத்து, அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சி அலுவலகங்களில், ஒன்பது ஊராட்சி செயலர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். அந்த அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருவர் மட்டும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துராஜ் கூறுகையில், ''தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள ஊழியர்களில் 39 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். 12 ஆயிரத்து 528 ஊராட்சி செயலர்களில், 10 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ