கோவை அரசு மருத்துவமனையில் பாம்புக்கடிக்கு பிளாஸ்மா சிகிச்சை
கோவை; பாம்புக்கடி சிகிச்சைக்கு வருபவர்களில், வழக்கமான சிகிச்சை முறையில் முன்னேற்றம் இல்லாத நபர்களுக்கு மட்டுமே, பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதன்படி, தேவையுள்ளவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்படவுள்ளது.கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் நாளொன்றுக்கு 7000 முதல் 9000 நபர்கள் வருகின்றனர். இதில் பாம்புக்கடி சிகிச்சைக்காக, பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானவர்கள் வருகின்றனர்.இச்சிகிச்சைக்கு வருபவர்களுக்கு, விஷத்தன்மையின் தாக்கம் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும். இச்சிகிச்சை, கடந்த மாதம் முதன்முறையாக இருவருக்கு முயற்சி செய்யப்பட்டது.அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''பிளாஸ்மா சிகிச்சையை பாம்புக்கடியால் வரும் அனைவருக்கும் கொடுக்க இயலாது. மருந்துகளில் முன்னேற்றம் இல்லாதவர்களுக்கு, மருத்துவர்களின் பரிந்துரைப்படி மட்டுமே இந்த சிகிச்சை வழங்கப்படும். கடந்த மாதம், இருவருக்கு பிளாஸ்மா மாற்று சிகிச்சை அளித்து, உயிரை காப்பாற்றினோம். ''இனி தேவைப்படுபவர்களுக்கு மட்டும், இச்சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, மனிதர்களின் ரத்தத்தில் இருந்து, பிளாஸ்மா பிரித்தெடுக்கும் கருவி இரண்டு உள்ளது,'' என்றார்.