ரேஷன் பொருட்களை லாரியுடன் எடை போட்டு கொண்டு வரணும்!
பொள்ளாச்சி;ரேஷன் கடைகளுக்கு உணவு பொருட்களை எடை குறையாமல் சப்ளை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்துார், பூசாரிபாளையம், கவுண்டம்பாளையம் மற்றும் வாகராயம்பாளையம் உள்ளிட்ட நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து, ரேஷன் கடைகளுக்கு உணவு பொருட்கள் சப்ைள செய்யப்படுகிறது. சப்ளை செய்யும்போது, பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியுள்ளதாவது:அரசு உத்தரவுப்படி பொருட்களின் மூட்டை தையல் நுால் பிரிக்கப்படாமல், அந்தந்த மாதத்திற்குரிய நிறமுள்ள நுால் வைத்து தைத்து அனுப்பப்பட வேண்டும். ஆனால் நுால் பிரிக்கபட்ட நிலையில், பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றன. பொருட்களின் எடையளவு குறைவாக உள்ளது. பொருட்களை லாரியில் ஏற்றிய பிறகு, கடைகளில் இறக்கும் போது அதன் முழு எடை சரியாக இருக்க வேண்டும். அதனால் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும், பொருட்களின் எடையளவு குறையாமல் இருக்க, லாரியை வேபிரிட்ஜில் எடையிட்டு, அந்த இரண்டு எடை நகல்களை தர, அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.