உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செல்வமகள் திட்ட கணக்கு துவங்க தபால் நிலையங்களில் சிறப்பு முகாம்

செல்வமகள் திட்ட கணக்கு துவங்க தபால் நிலையங்களில் சிறப்பு முகாம்

கோவை; பெண் குழந்தைகளுக்கு, செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு துவங்க, கோவை கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும், மார்ச் 1ம் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.பெண் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்துக்காகவும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யவும், மத்திய அரசால் துவங்கப்பட்ட திட்டம் தான், 'சுகன்யா சம்ரித்தி யோஜனா' எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம். இதில், 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் பெயரில் கணக்கு துவங்கலாம்.குறைந்தபட்ச தொகையாக, ஒரு நிதியாண்டுக்கு, 250 ரூபாய் முதல், அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இதுபோல, 15 ஆண்டுகளுக்கு பணம் முதலீடு செய்யலாம். அதன் பின் உள்ள ஆறு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யாமலேயே கூட்டு வட்டி அளிக்கப்படும். குழந்தைக்கு, 18 வயது ஆனதும், கல்வி செலவுக்கு முதலீட்டிலிருந்து பாதி தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். 21 வருடங்கள் கழித்து, முதிர்வு தொகை பெற்றுக் கொள்ளலாம்.இந்நிலையில், இத்திட்டத்தில் கணக்கு துவங்கவும், மக்களின் வசதிக்காகவும், கோவை கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும், சிறப்பு முகாம் நடந்து வருகிறது. மார்ச் 1ம் தேதி வரை நடக்கிறது.கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சிவசங்கர் கூறுகையில், ''செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவங்க, 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் தாய் அல்லது தந்தையின் ஆதார் மற்றும் பான்கார்டு நகல், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அவசியம். ''இதுபோல், பொன்மகன் சேமிப்பு திட்டத்திலும் கணக்கு துவங்கலாம்; இதற்கு வயது வரம்பு இல்லை. சிறப்பு முகாம் வாய்ப்பை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ