ஒட்டுவதற்கு இனி இடமில்லை அலங்கோலமானது நிழற்கூரை
வால்பாறை : வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் நிழற்கூரையில், விதிமுறையை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.வால்பாறை நகரில் காந்திசிலை பஸ் ஸ்டாண்ட், தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. அனைத்து எஸ்டேட்களுக்கும், இங்கிருந்து தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், பயணியர் வசதிக்காக கட்டப்பட்டுள்ள நிழற்கூரையை சுற்றிலும், அரசியல்கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு விளம்பர போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதனால், நிழற்கூரை அலங்கோலமாக காட்சியளிக்கிறது.பயணியர் கூறியதாவது:வால்பாறை நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூரையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை, நகராட்சி அதிகாரிகள் அகற்ற தயக்கம் காட்டுகின்றனர்.இதனால், பஸ் ஸ்டாண்டிற்குள் பயணியர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, நிழற்கூரையை சுற்றிலும் பல்வேறு அரசியல் கட்சியினர் விளம்பர போஸ்டர்கள் ஒட்டியுள்ளதால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதோடு, விதிமுறையை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.