பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், பருவமழை சரிவர பெய்யாத நிலையில், நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், தென்னை சாகுபடி பரப்பு அதிகம் உள்ளது. இதனால், கிணறு, போர்வெல் வாயிலாக நிலத்தடி நீரை எடுத்து, பாசனத்துக்கு விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.தென்னை மரத்துக்கு நாள் ஒன்று, குறைந்தபட்சம், 120 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால், பொள்ளாச்சி பகுதி விவசாயிகள், சொட்டு நீர் அல்லது நுண்ணீர் பாசனத்தில், வாரத்துக்கு இருமுறை மட்டுமே தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.தற்போது, நிலத்தடி நீர்மட்டம், 1,500 அடிக்கு கீழே சென்று விட்டது. பருவமழையும் சரிவர பெய்யாத நிலையில், நிலத்தடி நீர்மட்டம் அதலபதாளத்துக்கு சென்று, பெரும்பாலான போர்வெல்கள் வறண்டு விட்டன. கிணற்றிலும் தண்ணீர் இல்லை.இதனால், கடந்த இரண்டு மாதங்களாக, வறட்சி நிலவும் பகுதிகளில், தண்ணீரை விலைக்கு வாங்கி, கிணற்றுக்குள் தேக்கி, தென்னை மரங்களுக்கு பாய்ச்சுகின்றனர். கோடை மழை பெய்யாவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகி விடும்.