கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 13 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்வு
பொள்ளாச்சி; கோவை, திருப்பூர் மாவட்டத்தில், எஸ்.ஐ., தலைமையில் செயல்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள், இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில், போலீஸ் ஸ்டேஷன்கள், இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. அதில், எஸ்.ஐ., கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள், மற்றொரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீழ் செயல்பட்டு வந்தது. சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, அவசர நிலைகளை கையாளும் வகையில், போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை இருந்தது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த ஏப்., மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் போலீஸ் மானிய கோரிக்கையின் போது, 110வது விதியின் கீழ், எஸ்.ஐ., தலைமையிலான போலீஸ் ஸ்டேஷன்கள், இன்ஸ்பெக்டர் தலைமையிலான ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். அதன்படி, 280 போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, எஸ்.ஐ., தலைமையிலான போலீஸ் ஸ்டேஷன்கள், இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. கோவை மாவட்டத்தில், தடாகம், கே.ஜி.,சாவடி, காருண்யாநகர், செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன்கள்; கோட்டூர், சுல்தான்பேட்டை, மகாலிங்கபுரம், வடக்கிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில், கணியூர், அமராவதிநகர், செய்யூர், கொமரலிங்கம், உதியூர் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.