முதல்வர் கோப்பை கோ-கோ சூப்பர் லீக் சுற்றில் 4 அணிகள்
கோவை:மாநில அளவிலான முதல்வர் கோப்பை கோ-கோ போட்டி, கற்பகம் பல்கலையில், 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. 38 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன. முதல் காலிறுதி போட்டியில், கோவை மற்றும் திருப்பூர் அணிகள் விளையாடின. இதில், 18-8 என்ற புள்ளிக்கணக்கில், கோவை மாவட்ட அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில், சிவகங்கை மற்றும் மதுரை அணிகள் விளையாடின. இதில், 12-9 என்ற புள்ளிகள் அடிப்படையில், சிவகங்கை வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில், கன்னியாகுமரி மற்றும் ஈரோடு அணிகள் விளையாடின. இதில், ஈரோடு அணி 17-11 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது. நான்காவது காலிறுதிப் போட்டியில், திருநெல்வேலி மற்றும் சென்னை அணிகள் விளையாடின. இதில் 14-10 என்ற புள்ளிகள் அடிப்படையில், சென்னை அணி வெற்றி பெற்றது. கோவை, சிவகங்கை, சென்னை, ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட அணிகள், 'சூப்பர் லீக்' சுற்றுக்கு தகுதி பெற்றன. எஸ்.டி.ஏ.டி., மண்டல முதுநிலை மேலாளர் அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, கற்பகம் பல்கலை துணை வேந்தர் ரவி, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர், வெற்றி பெற்ற அணிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இன்றும் போட்டிகள் நடக்கின்றன.