தீபாவளி பண்டிகைக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தீபாவளி பண்டிகைக்கு, சுழற்சி முறையில், 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில், தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடும் நிலையில், பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர் அதிகம். இதனால், பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும். நெரிசலை சமாளிக்க, அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வரும், 20ல், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பொள்ளாச்சி பணிமனைகளில் இருந்து, வரும், 16 முதல் 22ம் தேதி வரை, சிறப்பு பஸ்கள் இயக்கப்படவும் உள்ளது. அதன்படி, பொள்ளாச்சியில் இருந்து, கோவை வழித்தடம் வாயிலாக, திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும், பழநி மார்க்கமாக மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சிறப்பு பஸ்களின் இயக்கம், 16ம் தேதி துவங்கும். டிரைவர்கள், அவரவர் விருப்பத்தின் பேரில், தொலைதுார ஊர்களுக்கு பஸ் இயக்கவும் அனுமதிக்கப்படும். இதேபோல, சொந்த ஊர் திரும்பிய மக்கள், தீபாவளி முடிந்து, மீண்டும் திரும்புவர். அதனால், பழநி மார்க்கமாக, தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவும் உள்ளது. குறிப்பாக, பயணியர் கூட்டத்துக்கு ஏற்ப, தேவையான வழித்தடங்களில் சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இவ்வாறு, கூறினர்.