உழவர் சந்தையில் ஓராண்டில் 5,480 டன் காய்கறி விற்பனை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி உழவர் சந்தையில் கடந்த ஓராண்டில், 22.42 கோடி ரூபாய்க்கு 5480.9 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.பொள்ளாச்சி நகராட்சி உழவர் சந்தையில், விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக சந்தைப்படுத்துகின்றனர். இங்கு, மொத்தம், 80 கடைகள் உள்ளன.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.காய்கறிகள் தரமாகவும், விலை குறைவாகவும், விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், மக்கள் உழவர் சந்தையில் காய்கறி வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.கடந்த 2024ல், ஜன., முதல் டிச., வரை, 22 கோடியே, 42 லட்சத்து, 41 ஆயிரத்து, 980 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையானது.உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், 'உழவர் சந்தையில் கடந்தாண்டு, 5480.9 மெட்ரிக் டன் காய்கறிகள் வரத்து இருந்தது. அதன்படி, 22,628 விவசாயிகள், 10 லட்சத்து, 92 ஆயிரத்து, 60 நுகர்வோர் வருகை புரிந்துள்ளனர்.நாளொன்றுக்கு, சராசரியாக, 62 விவசாயிகள் வாயிலாக, 15 டன் காய்கறிகள் தருவிக்கப்பட்டு, 6.14 லட்சம் ரூபாய்க்கு 2,991 நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது,'என்றனர்.