கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை! வேளாண் துறை எச்சரிக்கை
கோவை: உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, வேளாண் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டத்தில், பரவலாக மழை பெய்துள்ளது. நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யக்கூடிய பயிர்களுக்குத் தேவையான அனைத்து உரங்களும், உரிமம் பெற்ற தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், இருப்பு வைக்கப்பட்டு, வினியோகிக்கப்படுகிறது.தற்போது, கோவை மாவட்டத்தில், யூரியா 2,440 டன், டி.ஏ.பி., 1,367 டன், பொட்டாஷ் 2,260, சூப்பர் பாஸ்பேட் 1,683 டன் மற்றும் காம்பளக்ஸ் உரங்கள் 4,384 டன் என்ற அளவில் போதிய இருப்பு வைக்கப்பட்டுள்ளது.உரங்களின் இருப்பு மற்றும் வினியோகம் குறித்து உரிய அலுவலர்கள் மாவட்ட, வட்டார அளவில் ஆய்வு செய்து வருகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்படி, கடும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.