உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன ஓட்டிகள் கவனத்தை சிதறடிக்கும் விளம்பர பலகைகள்! மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அலட்சியம்

வாகன ஓட்டிகள் கவனத்தை சிதறடிக்கும் விளம்பர பலகைகள்! மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அலட்சியம்

கோவை; வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், கோவையில் சட்ட விரோதமாக, அரசு உத்தரவுகளை மீறி, மேம்பாலங்களுக்கு அருகே விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்றாமல், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அலட்சியமாக உள்ளனர்.தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு சொந்தமான சாலைகள் மற்றும் சாலை சந்திப்புகளிலும், சாலைகளுக்கு அருகாமையிலும், வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், எவ்விதத்திலும் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது; எந்த சைஸிலும் வைக்கக் கூடாது. சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் பல முறை அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றன.அனுமதியற்ற விளம்பர பலகைகள் மற்றும் இரும்பு சட்டங்களை அகற்றச் சொல்லி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தமிழக அரசு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது; அவற்றை அகற்றச் சொல்லி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையில் இருந்து சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டிருக்கின்றன.கோவை மாநகராட்சியில், கோர்ட் உத்தரவு மற்றும் தமிழக அரசின் அறிவுறுத்தல்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. சட்ட விரோதமாக பல்வேறு இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பதற்கு நகரமைப்பு பிரிவினர் அனுமதி அளிக்கின்றனர்.இதுதொடர்பாக விளக்கம் கேட்டால், 'அரசாணைப்படி, விதிமுறைக்கு உட்பட்டு, மாநகராட்சியால் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது' என, நகரமைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.ஆனால், மாநகராட்சி வழங்கிய அனுமதி எண் குறிப்பிட்டு, விளம்பர பலகை வைக்கப்படவில்லை. அவ்வாறு வைத்திருந்தால், எந்த நிறுவனத்துக்கு எந்த அதிகாரி அனுமதி வழங்கினார் என்பது, அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்.சமீபகாலமாக, வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், மேம்பாலங்களுக்கு அருகிலேயே மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அவிநாசி ரோடு, நஞ்சுண்டாபுரம் ரோடு, செல்வபுரம் ரோடு, உப்பிலிபாளையம் மேம்பாலம், கூட்ஸ் ஷெட் ரோடு, ஸ்டேட் பாங்க் ரோடு, குறிச்சி குளக்கரை திருவள்ளுவர் சிலைக்கு எதிரே, ஆத்துப்பாலம் சந்திப்பு பொள்ளாச்சி ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே, காந்திபுரம் டெக்ஸ்டூல் பாலம் அருகே, கவுண்டம்பாளையம் பகுதியில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை அகற்றாமல், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அலட்சியமாக இருக்கின்றனர்.இதேபோல், ரயில்வே நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பலகைகள் வைக்க, சென்னை ஐகோர்ட்டில் விளம்பர நிறுவனத்தினர் இடைக்கால தடையுத்தரவு பெற்று, விளம்பர பலகைகள் வைத்திருக்கின்றனர்.அவ்வாறு வைத்தாலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தடையின்மை சான்று பெற்றிருக்க வேண்டும் என்பது விதிமுறை. இவ்விதிமுறையை பின்பற்றாமல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவை, வாகன ஓட்டிகள் கவனத்தை திசைதிருப்பும் வகையில் உள்ளன.கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் ஆஜராகி, இறுதித் தீர்ப்பு பெறாமல் இருக்கின்றனர். அதற்கு மாற்றாக, ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் பார்க்காத வகையில், துணி கட்டி, விளம்பர பலகைகள் மறைக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்திருக்கிறார்.ஆனால், கமிஷனர் உத்தரவையே, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் மதிக்கவில்லை; ஒரு இடத்தில் கூட, துணி வைத்து விளம்பர பலகைகள் மறைக்கப்படவில்லை.இதிலிருந்து, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், விளம்பர பலகைகள் அகற்றும் விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''விளம்பர பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. போக்குவரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால், ரயில்வே இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், 'ஸ்கிரீன்' அமைத்து மறைக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ