டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் வீடு தேடி வழங்க ஏற்பாடு
பொள்ளாச்சி: மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி சென்று 'டிஜிட்டல்' உயிர்வாழ் சான்றிதழ் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது. தபால்துறை பொள்ளாச்சி கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் அறிக்கை: ஓய்வூதியம் பெறுவோர் உயிர்வாழ் சான்றிதழ் வழங்க நேரில் சென்று சிரமம் அடைகின்றனர். இதனை தவிர்க்க 'இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி' ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக், முக அங்கீகார தொழில்நுட்ப நடைமுறையை பயன்படுத்தி 'டிஜிட்டல்' உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக, 70 ரூபாயை தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரர்களிடம் ஆதார், மொபைல்போன் எண், பி.பி.ஓ., எண், ஓய்வூதிய வங்கி கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்து 'டிஜிட்டல்' உயிர்வாழ் சான்றிதழை சமர்பித்து பயன்பெறலாம். எனவே, மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.