அதிகாரிக்கு பிடிவாரன்ட் உத்தரவு; திரும்ப பெற கோரிய மனு தள்ளுபடி
கோவை; கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் கதிர்மதியோன்; கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர். அரசு டவுன் பஸ்சில் சென்றபோது, கூடுதல் கட்டணம் வசூலித்ததால், இழப்பீடு கேட்டு கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணையம், 'கூடுதல் கட்டணத்தை திருப்பிச் செலுத்தவும், இழப்பீடாக ரூ.10,000 வழங்கவும், 2018ல் உத்தரவிட்டது. இழப்பீட்டு தொகையை வட்டியுடன் சேர்த்து, அரசு போக்குவரத்து கழகம் செலுத்தியது. பயணிகளிடம் வசூலித்த கூடுதல் கட்டணம் தொடர்பான, புள்ளிவிவரத்தை தாக்கல் செய்யாததால், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனருக்கு, கடந்த ஏப்ரலில் ஜாமினில் வெளியே வரக்கூடிய, 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி, நுகர்வோர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை தள்ளுபடி செய்து, நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.