ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் அ....ஆ! தினமலர் சார்பில் இன்று வித்யாரம்பம்!
கோவை : 'தினமலர்' நாளிதழ் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் சார்பில், கோவையில் இன்று (அக்., 12) வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கிறது. நகரின் பிரபலங்கள் முன்னிலையில், ஐயப்ப சுவாமியின் அனுக்கிரகத்துடன் நடைபெறுவதால், இந்நிகழ்ச்சி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.விஜயதசமி நாளன்று கல்வி, கலைகள் என எந்நிகழ்வை துவக்கினாலும், வெற்றிகரமாக அமையும் என்பது மக்களின் நம்பிக்கை. அன்றைய தினம் நெல்மணிகளில், 'அ... ஆ...' எழுதிப்பார்த்து, குழந்தைக்கு கல்வி புகட்டுவர்.'தினமலர்' நாளிதழ் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் சார்பில், கோவை ராம்நகர் சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்தில், இன்று (அக்., 12) காலை, 7:30 முதல், 10:00 மணி வரை, வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது.சிறப்பு விருந்தினர்களாக, கோவை கலெக்டர் கிராந்திகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், பண்ணாரியம்மன் குழும தலைவர் பாலசுப்ரமணியம், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி, பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் மணிமேகலை மோகன்தாஸ் ஆகியோர் பங்கேற்று, குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சியை, துவக்கி வைக்கின்றனர்.நகரின் பிரபலங்கள் முன்னிலையில், அவர்களின் மனப்பூர்வமான ஆசியுடன், ஐயப்ப சுவாமியின் அனுக்கிரகத்துடன் நடக்கும் நிகழ்ச்சி என்பதால், பெற்றோர் இந்நிகழ்ச்சிக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிப்பது வழக்கம். பங்கேற்கும் குழந்தைகளுக்கு சிலேட், பென்சில், ரப்பர், பேக் உள்ளிட்ட கல்வி பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.இதுநாள் வரை முன் பதிவு செய்ய மறந்திருந்தாலும் பரவாயில்லை; நிகழ்ச்சி நடைபெறும் ராம்நகர் ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்துக்கு, இன்று காலை, 7:30 மணிக்கு நேரில் வந்து, பதிவு செய்து பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் பெற்றோர், தங்களது இரண்டரை முதல் மூன்றரை வயது குழந்தைகளை அழைத்து வரலாம். அனுமதி இலவசம். வாருங்கள் சந்திப்போம்!