உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் விலை உயர்வு

வாழைத்தார் விலை உயர்வு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அன்னுார் சாலை நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏலம் மையம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்திற்கு காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், பவானிசாகர், சத்தியமங்கலம் உள்பட சுற்றுப்பகுதிகளில் இருந்து, 1500 வாழைத்தார்கள் மட்டுமே, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த ஏலத்தில், 18 வியாபாரிகள் பங்கேற்றனர். அதனால் வாழைத்தார்களை ஏலம் எடுப்பதில், வியாபாரிகளிடையே போட்டி ஏற்பட்டது. இதனால் நேந்திரன், கதளி ஒரு கிலோவுக்கு ஐந்து ரூபாயும், வாழைத்தாருக்கு, 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.இதுகுறித்து வாழைத்தார் ஏல மைய நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, சின்னராஜ் ஆகியோர் கூறுகையில், ''ஆகஸ்ட் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை, ஏழு மாதங்களுக்கு வாழைத்தார்கள் அறுவடை நடைபெறும். மார்ச் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை வாழைத்தார்கள் அறுவடை குறைவாக இருக்கும். அதிலும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தார்களின் வரத்து மிகவும் குறைவாக இருக்கும். அந்த வகையில் இன்று (நேற்று) நடந்த ஏலத்துக்கு, 1500 வாழைத்தார்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் நேந்திரன், 210, கதளி 233 வாழைத்தார்களை மட்டுமே, விவசாயிகள் கொண்டு வந்தனர். நேந்திரன் ஒரு கிலோ குறைந்தபட்சம், 20 ரூபாய்க்கும், அதிகபட்சம், 53 ரூபாய்க்கும், கதளி குறைந்தபட்சம், 35க்கும், அதிகபட்சம், 57 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம், கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை உயர்ந்துள்ளது.பூவன் ஒரு தார் குறைந்தபட்சம், 200, அதிகபட்சம், 550 ரூபாய்க்கும், ரஸ்தாலி, 200, அதிகபட்சம், 900க்கும், தேன் வாழை, 200, அதிகபட்சம், 700க்கும், செவ்வாழை குறைந்த பட்சம், 250, அதிகபட்சம், 1,000 ரூபாய்க்கும், மொந்தன், 150 அதிகபட்சம், 350க்கும், பச்சை நாடன் குறைந்தபட்சம், 150க்கும் அதிகபட்சம் 450 ரூபாய்க்கும், ரோபஸ்டா குறைந்த பட்சம், 150 ரூபாய்க்கும், அதிகபட்சம் 350 ரூபாய்க்கும் ஏலம் போனது. ஜூலை மாதம் வரை வாழைத் தார்களின் விலை உயர்வாகவே இருக்கும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ