உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரபணு காரணங்கள் அறிய ரத்த மாதிரி சேகரிப்பு டயபடிக் புட் பாதிப்பு

மரபணு காரணங்கள் அறிய ரத்த மாதிரி சேகரிப்பு டயபடிக் புட் பாதிப்பு

கோவை: கோவை அரசு மருத்துவமனை எலும்பியல் துறையின் கீழ், டயபடிக் புட், பாதவளைவு மற்றும் இடுப்பு மூட்டு எலும்பு சிதைவு பாதிப்புகளுக்கு, மரபணு காரணங்கள் உள்ளதா என்பதை அறிய, பாதிக்கப்பட்டவர்கள் 50 பேர் வீதம் ரத்த மாதிரிகள், ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், எலும்பியல் பிரிவின் கீழ், குழந்தைகளுக்கான பாதவளைவுக்கான மரபணு காரணம் குறித்து, ஆய்வு செய்து ஆராய்ச்சி கட்டுரை, 2022ம் ஆண்டு எலும்பியல் துறை சார்பில் வெளியிடப்பட்டது. ஆய்வில் கண்டறியப்பட்ட முடிவுகளை, உறுதிசெய்யும் நோக்கில், சமீபத்தில் பாத வளைவு பிரச்னை உள்ள, 50 குழந்தைகளிடம் ரத்த மாதிரி சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனை எலும்பியல் பிரிவு இயக்குனர்டாக்டர் வெற்றிவேல் செழியன் கூறியதாவது: எலும்பியல் பிரிவுகளின் கீழ், மூன்று விதமான ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. சர்க்கரை பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு, பாதங்களில் புண் ஏற்பட்டு பலருக்கு, கால் அகற்றும் நிலை ஏற்படுகிறது. இதை தடுக்க, 50 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரித்து மரபணு பரிசோதனை மேற்கொள்ள ஆய்வுக்கு கொடுத்துள்ளோம். எந்த குரோமசோம்களில் இப்பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிந்துவிட்டால், சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் பாதங்களை இழக்காமல் காப்பாற்றி விடலாம். ஆறு மாதங்களில் இந்த ஆராய்ச்சிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தவிர, கொரோனா பாதிப்புக்கு பிறகு, பலர் இடுப்பு மூட்டு பகுதியில் எலும்புகளுக்கு சரியான ரத்தப்போக்கு இல்லாமல், திடீர் 'ஹார்ட் அட்டாக்' ஏற்படுவது போன்று, எலும்பு சிதைந்து பாதிக்கப்படுகின்றனர். இப்பாதிப்புக்கு உள்ளான, 50 பேரிடம் ரத்த மாதிரி சேகரித்து, மரபணு ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். ஆராய்ச்சி முடிவுகளுக்கு பின், அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து திட்டமிட முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

இரண்டாம் கட்ட பரிசோதனை

''2022ல் பாதவளைவு ஏற்பட்ட குழந்தைகளின், மரபணு பரிசோதனை செய்து அதன் காரணங்களை கண்டறிந்து ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிட்டுள்ளோம். இது கோவையில், 50 பேருக்கு செய்துள்ளதால், இம்முடிவை வைத்து தீர்வை கூற இயலாது. தீர்வுகளை கூறி பெரிய அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். தற்போது, எங்கள் ஆராய்ச்சி முடிவுகளை மீண்டும் உறுதி செய்ய, புதிதாக பாதிப்பு ஏற்பட்ட, 50 குழந்தைகளிடம் ரத்த மாதிரிகள் சேகரித்து, மரபணு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். இம்முடிவுகளும், பழைய முடிவுகளும் ஒரே மாதிரி இருந்தால், பெரிய அளவிலான ஆராய்ச்சிகள், தீர்வு என அடுத்தகட்ட நகர்வுக்கு பாதை அமையும்,'' என்றார் டாக்டர் வெற்றிவேல் செழியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ