அக்கறையில்லா அரசு துரைகள்! குடிநீர், கழிப்பிடம், இருக்கை வசதிகளில்லை; அரசு அலுவலகத்தில் அலைமோதும் மக்கள்
மக்கள் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு அலுவலகங்களுக்கு செல்கின்றனர். ஆனால், அரசு அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாததால், மக்கள் சிரமப்படுகின்றனர். பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம், தாலுகா, நகராட்சி, வடக்கு, தெற்கு ஒன்றியம் என, 13க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன.இங்கு, பொதுமக்கள் தங்களது அடிப்படை வசதி குறித்த பிரச்னைகள், பட்டா மாறுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ் என பல தேவைகளுக்கான செல்கின்றனர். 'ஆன்லைன்' விண்ணப்பம், 'டிஜிட்டல்' சான்றிதழ் முறைக்கு மாறினாலும், ஆவணங்கள் சரிபார்ப்புக்கு அதிகாரிகள் அழைக்கும் போது மக்கள் செல்கின்றனர். ஆனால், அரசு அலுவலகங்களில், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. சப் - கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் குறைதீர் நாள் கூட்டம் நடக்கிறது. அப்போது மட்டும், குடிநீர் கேன் வைக்கப்படுகிறது. மற்ற நாட்களில், மனு கொடுக்கவும், அதிகாரிகளை சந்திக்கவும் மக்கள் செல்லும் போது, குடிநீர் வசதியின்றி அவதிப்படுகின்றனர். அதேபோன்று, கழிப்பிட வசதியும் இல்லாததால், மக்கள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகளுக்கு கழிப்பிட வசதி இருப்பது போன்று, பொதுமக்களுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். பழைய தாலுகா அலுவலகத்தில் இருந்து, புதிய தாலுகா அலுவலகத்துக்கு செல்லும் வழித்தடம் மிக மோசமாக உள்ளது. கருவூலம், கிளைச்சிறை அமைந்துள்ள இடத்தில், ரோடு மிக மோசமாக உள்ளது. பழைய குடிமைப்பொருள் அலுவலக வளாகத்துக்கு முன்பாக புதர் மண்டி காணப்படுகிறது. ஒன்றிய அலுவலகங்களில், பொதுமக்கள் காத்திருக்க போதிய இருக்கை வசதியில்லை. அதிகாரிகளை சந்திக்க வரும் மக்கள், அங்குள்ள மாடி படிக்கட்டுகள், வராண்டா திட்டுகளில் அமரும் நிலையே உள்ளது. தெற்கு வேளாண்துறை அலுவலகம் இடப்பற்றாக்குறையுடன் செயல்படுகிறது. அங்கு போதிய வசதிகள் இல்லாததால், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகம் கட்ட அரசிடம் நிதி, இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. நகராட்சி அலுவலகத்தில், வாகன நிறுத்தப்பகுதியில் நிழற்கூரை வசதியில்லை. அரசு அலுவலகங்களில், 'பார்க்கிங்' வசதி இல்லாதது, இருக்கைகள், குடிநீர், கழிப்பிட வசதி இல்லாததால், மக்கள் சிரமத்துக்கு உள்ளாவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். * கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில் தாலுகா அலுவலக கட்டடம், பொது இ-சேவை மையம் போன்ற அலுவலகங்கள் செயல்படுகின்றன. இ-சேவை மையத்தில் மக்கள் அமரும் இருக்கைகள் குறைவாகவும், தூசு படிந்தும், குப்பை மயமாக காணப்படுகிறது. தாலுகா அலுவலகத்தில், குடிநீர் இயந்திரம் பல மாதங்களாக பயன்பாடின்றி காட்சிப்பொருளாகவே உள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். * வால்பாறையில் உள்ள அரசு அலுவலகங்களில் குடிநீர், கழிப்பிடம், இருக்கை உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. தாலுகா அலுவலக வரவேற்பு அறை கட்டிமுடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை. அட்டகட்டியில் உள்ள மின்வாரிய அலுவலக ஆய்வகம் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. வால்பாறை கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர் குடியிருப்பு இடிந்து விழும் நிலையில் உள்ளது. பழைய போலீஸ் ஸ் டேஷன், நகராட்சிக்கு சொந்தமான கட்டடங்கள், பள்ளி வகுப்பறைகள் பயன்படுத்தாமல் காட்சிப்பொருளாக உள் ளன.
அரசுக்கு அறிக்கை!
அதிகாரிகள் கூறுகையில், 'அரசு அலுவலகங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். அதுபோன்று கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை பொதுப்பணித்துறை வாயிலாக மதிப்பீடு தயாரித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள அரசு கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். - நிருபர் குழு -