வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருடிய மணலை ஜாக்கிரதியாக எங்கு கொண்டு செல்ல வேண்டுமோ அதை கச்சிதமாக கொண்டு செல்வதற்கு திருடர்களே பொருத்தம் இந்த நவீன கேமரா
தொண்டாமுத்தூர்: கோவை புறநகரில் நடந்த சட்டவிரோத மண் திருட்டு வழக்கு எதிரொலியாக, ரூ.1.83 கோடியில், 132 அதிநவீன சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தில், பேரூர் தாலுகா, தடாகம் பகுதி, மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில், மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில், சட்டவிரோதமாக மண் திருட்டு நடந்தது. இதுகுறித்து பலரும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நடத்த, சென்னை உயர்நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. அக்குழுவினரும், சம்பவ இடங்களில் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கனிமவளக்கொள்ளை, விவகாரத்தில், அரசு அதிகாரிகள் மீது நீதிபதி அதிருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து, கனிமவளக்கொள்ளையை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், கனிமவள கொள்ளையை கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதன் எதிரொலியாக, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், கனிமவளத்துறை சார்பில், கனிமவளக்கொள்ளையை தடுக்க, சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, எங்கெங்கு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என, உள்ளாட்சி அமைப்புகளிடம், இடங்கள் தேர்வு செய்து தர கோரினர். உள்ளாட்சி அமைப்பினரும், இடங்களை, பரிந்துரைத்துள்ளனர். இதன் அடிப்படையில், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. ஏ.ஐ.,கேமரா பதிவுகள் போலீசுடன் இணைப்பு கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கனிமவளக்கொள்ளையை தடுக்க, 63 இடங்களில், 1.83 கோடி ரூபாய் மதிப்பில், 102 ஏ.ஐ., கேமராக்களும், 24 தானியங்கி முறையில் வாகனங்களின் நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுக்கும் கேமராக்களும் பொருத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது, 90 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ளவை விரைவில் பொருத்தப்படும். இந்த கேமரா பதிவுகள், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களுடன் இணைக்கப்படும்' என்றார்.
திருடிய மணலை ஜாக்கிரதியாக எங்கு கொண்டு செல்ல வேண்டுமோ அதை கச்சிதமாக கொண்டு செல்வதற்கு திருடர்களே பொருத்தம் இந்த நவீன கேமரா