உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பனை மரம் வெட்ட செக்! கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கம்... ஒரு மரத்துக்கு ஈடாக பத்து மரக்கன்றுகள்

பனை மரம் வெட்ட செக்! கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கம்... ஒரு மரத்துக்கு ஈடாக பத்து மரக்கன்றுகள்

பெ.நா.பாளையம்: உரிய அனுமதி இல்லாமல் பனை மரங்களை இனி வெட்ட முடியாது. ஒரு பனை மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாக, 10 பனை மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என, வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. நீர்நிலைகள் அருகே பனை மரங்களை வளர்த்தால், நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும். மண் அரிப்பு தடுக்கப்பட்டு, பயனுள்ள உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என, முன்னோடி விவசாயிகள் கூறுகின்றனர். பனை மரங்களின் வேர்கள், வறட்சியான காலகட்டத்திலும் நிலத்தடி நீரை எடுத்துக்கொண்டு, செழித்து வளர்கிறது. மண் அரிப்பை தடுக்க வயல் வரப்புகளில் பனை வளர்க்கப்படுகிறது. அதே போன்று ஏரி, குளம், குட்டைகளின் கரைகளிலும், பனங்கன்று நட்டு பாதுகாக்கப்படுகிறது. பனையின் பலன்களை தெரிந்த விவசாயிகள் விளை நிலத்தை சுற்றிலும், கிணற்றின் அருகிலும், நடவு செய்வதோடு, 60 முதல், 80 ஆண்டு கால பனை மரங்களை வெட்டாமல் பாதுகாத்து வருகின்றனர். கிணறுகளின் அருகில் பனை மரங்களின் வேர்கள் கிணற்றின் ஆழத்துக்கு சென்று, நிலத்தடி நீரை பாதுகாக்க உதவுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதையடுத்து, தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க, மாவட்ட மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பு குழுக்களை உருவாக்கி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர் கூறுகையில், பனை மரங்களை வெட்டுவதை தடுக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவிலான குழுவுக்கு கலெக்டர் தலைவராக இருப்பார். கண்காணிப்பு தலைவராக வருவாய் கோட்டாட்சியரும், ஒருங்கிணைப்பாளராக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரும் இருப்பார்கள். தோட்டக்கலை இணை இயக்குனர், வேளாண்மை இணை இயக்குனர், கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்தின் மாவட்ட அளவிலான அதிகாரி ஆகியோர் செயல் உறுப்பினராகவும், உறுப்பினர்களாகவும் இருப்பர். வட்டார அளவிலான கண்காணிப்பு குழுவின் தலைவராக தோட்டக்கலை உதவி இயக்குனர் இருப்பார். பனை மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவை பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படும். கண்காணிப்பு குழுக்கள் வாயிலாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பனைமரம் வெட்ட நேரிட்டால், மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி அவசியமாகும். மரத்தை வெட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால், வேளாண் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். வட்டார அளவிலான குழு, பனைமரம் வெட்ட வேண்டிய அவசியம் குறித்து, மாவட்ட அளவிலான குழுவுக்கு அறிக்கை அளிக்கும். மாவட்ட அளவிலான குழுவின் கூட்டத்தை குறைந்தபட்சம், 3 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது தேவையின் அடிப்படையில் நடத்த வேண்டும். பனை மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாக, 10 மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். இனிமேல், பனை மரங்களை உரிய அனுமதி பெற்ற பிறகே வெட்ட முடியும். பனை மரத்தின் பாகங்களை ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும்போது தோட்டக்கலை துறை வாயிலாக வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தை கட்டாயம் காண்பிக்க வேண்டும். இதனால் தேவையின்றி பனை மரங்கள் வெட்டுவது தடுக்கப்படும். இதனால் நிலத்தடி நீர் காப்பாற்றப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ