தேர்வுக்கு உதவும் முதல்வர் படைப்பகம்; இந்தாண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம்
கோவை; கவுண்டம்பாளையம், கணபதியில் மாணவ, மாணவியர் பயன்பெறும் விதமாக தலா ரூ.3.36 கோடி மதிப்பீட்டில், 'முதல்வர் படைப்பகம்' அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.மாநகராட்சி பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்தும் விதமாக கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.அதேபோல், மாணவ, மாணவியர் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக, 'முதல்வர் படைப்பகம்' இரு இடங்களில் அமைக்கப்படுகிறது.அதன்படி, மாநகராட்சி, 33வது வார்டு, கவுண்டம்பாளையம் மற்றும், 20வது வார்டு, கணபதி மாநகர் பகுதிகளில், தலா ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் இப்படைப்பகம் கட்டப்படுகிறது. இதில், போட்டி தேர்வுக்கான நுால்கள், கட்டண மில்லா இணைய வசதி, குளிரூட்டப்பட்ட ஆலோசனை கூடங்கள் இடம்பெறுகின்றன.தவிர, கம்ப்யூட்டர்களுடன் கூடிய அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்புகளுடன், 'முதல்வர் படைப்பகம்' அமைக்கப்படுகிறது.புதிய தொழில்முனைவோர், வேலை தேடுவோருக்கும் வாய்ப்புகளை வழங்கும் வகையில், பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெறுகின்றன.கோவை எம்.பி.,ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் கட்டுமான பணிகளை நேற்று துவக்கிவைத்தனர்.மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராகும் விதமாக புத்தகங்கள் அடங்கிய நுாலகம், வாசிப்பு அறை, இணைய வசதி உள்ளிட்டவை, முதல்வர் படைப்பகத்தில் இடம்பெறுகின்றன. வரும், டிச., மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.--சிவகுரு பிரபாகரன்கமிஷனர், கோவை மாநகராட்சி