கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்த கலெக்டரும், கமிஷனரும்
கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஏப்.,4ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், கும்பாபிேஷக பணிகள் குறித்து, கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.கோவில் அடிவாரத்தில் வாகனங்கள் பார்க்கிங் செய்யும் இடம், பக்தர்கள் படிக்கட்டு பாதையில் செல்லும் வழிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.கும்பாபிஷேக தினத்தன்று, சிறப்பு பாஸ் பெற்றவர்கள், உபயதாரர்கள், சிறப்பு விருந்தினர்கள் என, எந்த வாகனமும், மலைப்பாதையில் அனுமதிக்க கூடாது.கோவில் வாகனம் மூலம் மட்டுமே, அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர் மற்றும் உணவு தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.மின் ஒயர்களால், அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில், முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். அடிவாரத்தில் நிற்கும் பக்தர்களும், கும்பாபிஷேகத்தை நேரலையில் காண ஏற்பாடு செய்ய வேண்டும்.வெயில் காலம் என்பதால், பக்தர்கள் நிற்கும் பகுதியில், தேங்காய் நார்களால் ஆன, விரிப்புகள் விரிக்க வேண்டும். தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வனப்பகுதி என்பதால், வனவிலங்குகளை கண்காணிக்க வனத்துறை சிறப்பு குழு அமைக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.