உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலர் கலரா இனிப்பு! தயாரிப்பு நிறுவனத்தில் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி

கலர் கலரா இனிப்பு! தயாரிப்பு நிறுவனத்தில் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி

கோவை : கோவையில் உள்ள ஒரு இனிப்பு தயாரிப்பு நிறுவனத்தில், தடை செய்த வண்ண நிறமிகள், இனிப்புகளில் கலந்திருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறையினர் மூன்று டன் இனிப்பு வகைகளை, பறிமுதல் செய்து அழித்தனர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவின் படி, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில், இனிப்பு தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்களில், திடீர் சோதனை மேற்கொண்டனர்.இதில், 436 உணவு தயாரிப்பாளர்கள், மொத்தம் மற்றும் சில்லறையாக விற்பனை செய்யும் இடங்களில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 306 கிலோ இனிப்பு மற்றும் காரவகைகளில் நிறமிகள் கலந்து தயாரிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். அதன் மதிப்பு சுமார் 1,00,000 ரூபாய். அளவுக்கு அதிகமாக வண்ண நிறமிகள் சேர்த்த, இனிப்புகளில் இருந்து, 57 உணவு மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. 32 தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு, உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம், 2006 பிரிவு 55-ன் கீழ், நோட்டீஸ் வழங்கப்பட்டது.தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட, பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி, உணவுபொருட்களை பார்சல் செய்த ஐந்து கடைகளுக்கு, 2,000 வீதம் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இனிப்பு தயாரிப்புக்கு பயன்படுத்திய கழிவு எண்ணெய், 1,780 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு, உணவு பாதுகாப்புத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட, 'ருக்கோ' திட்டத்துக்கு வழங்கப்பட்டது.இனிப்பு மற்றும் கார வகைகளின் தரம் குறித்த புகார்களுக்கு, 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின், வாட்ஸ்அப் எண்ணை, தொடர்பு கொள்ளலாம்.Tn Food Safety Consumer என்ற செயலி வாயிலாகவும், தகவல் தெரிவிக்கலாம்.

'கலர் கலரா இனிப்பு உடலுக்கு பாதிப்பு'

உணவுப்பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:இனிப்புகளில் நிறமிகள் சேர்க்கப்படுவது குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நிறமியும் எந்தளவுக்கு சேர்க்கப்பட வேண்டும் என்ற அளவு உள்ளது. ஒரு சில நிறமிகளை சேர்க்கவே கூடாது என்ற விதியும் உள்ளது.சராசரியாக, 100 பி.பி.எம்., வரை நிறமிகள் சேர்க்கலாம். அதிக நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளதை, அவற்றின் 'பளிச்' நிறத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். இவற்றை தொடர்ந்து உட்கொள்வதால், வயிற்று உபாதைகள், அல்சர், அஜீரண கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.அதிகளவில் பயன்படுத்தும் போது, புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல், பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யில் செய்யப்படும் கார வகைகளை உட்கொள்வதால், உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்.அது, மாரடைப்பு உள்ளிட்ட இருதய பாதிப்புகள் ஏற்பட காரணியாக அமையும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ