சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க கமிஷனர் உத்தரவு
கோவை; மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சூயஸ் நிறுவனத்தின், 24 மணிநேர குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்ட (யு.ஜி.டி.,) பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், துடியலுார் முதல் அப்பநாயக்கன்பாளையம் வரையிலான ரோடுகள், துடியலுார் ரோடு, ஜி.என். மில்ஸ் ரோடு, உருமாண்டாம்பாளையம் ரோடு, வெள்ளக் கிணறு ரோடு ஆகிய பகுதிகளில் குடிநீர் திட்டம் மற்றும் யு.ஜி.டி., பணிகளுக்காக தோண்டப்பட்டு சேதமடைந்த ரோடுகளை கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். வாகன ஓட்டிகள் சிரமத்தை தவிர்க்கும் விதமாக, உடனடியாக சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க, அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.