உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷனில் தரமற்ற உப்பு, மசாலாப்பொடி வாங்க கட்டாயப்படுத்துவதாக புகார்

ரேஷனில் தரமற்ற உப்பு, மசாலாப்பொடி வாங்க கட்டாயப்படுத்துவதாக புகார்

கோவை; ரேஷன்கடைகளில் மசாலாப்பொடி, டீ துாள், உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை விற்பனை செய்ய சொல்லி, வழங்கல் துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக, ரேஷன்கடை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில், 1548 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மானிய விலையில் வழங்கப்படும் அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.இப்போது ரேஷன்கடைகளில், தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் மசாலாப்பொடி, டீ துாள், உப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய சொல்லி, அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக, ரேஷன் கடை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, ரேஷன்கடை ஊழியர்கள் கூறியதாவது:ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களையே முறைாக வழக்க முடியாத நிலை உள்ளது. மேலும், இப்போது புளூடூத் இணைப்பு தராசில் எடை போட்டு பொருட்கள் வழங்கும் நடைமுறை, அமலுக்கு வந்துள்ளது. இந்த தராசில் எடை போடும் போது காலதாமதம் ஏற்படுவதால், கடை ஊழியர்களுக்கும், கார்டுதாரர்களுக்கும் இடையே தினமும் தகராறு ஏற்படுகிறது. இந்நிலையில், தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் உப்பு, -டீ துாள் - ரவை, - மைதா உள்ளிட்ட மளிகை பொருட்களையும் விற்பனை செய்யுமாறு, அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். இந்த பொருட்கள் தரம் இல்லாமல் இருப்பதால் யாரும் வாங்குவதில்லை. விற்பனை ஆகாத பொருட்களை திரும்ப பெறுவதில்லை. விற்காத பெருட்களுக்கான தொகையை ரேஷன்கடை ஊழியர்கள் செலுத்த வேண்டும் என, அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

வேண்டியதில்லை

மாவட்ட வழங்கல் துறையில் இது குறித்து கேட்டதற்கு, 'கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, ரேஷன் கடைகளில் மசாலா பொருட்களை, எந்த அதிகாரியும் விற்பனை செய்யச் சொல்லவில்லை. அரசு மானியமாக வழங்கும் பொருட்களை தவிர, மற்ற எந்த பொருட்களையும் ரேஷனில் விற்பனை செய்யக்கூடாது. அப்படியே கடை ஊழியர்கள் விற்பனை செய்தால், அதை கார்டுதாரர்கள் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. ரேஷனில் வேறு பொருட்களை விற்பனை செய்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி