உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் பணி நிரந்தரத்துக்கு எதிர்பார்ப்பு

 கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் பணி நிரந்தரத்துக்கு எதிர்பார்ப்பு

- நமது நிருபர் -: 'தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில், கடந்த, 23 ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் மத்தியில், ஆட்சிக்கு வரும் அரசுகள், பணி நிரந்தர எதிர்பார்ப்பை உருவாக்கி ஏமாற்றி வருகின்றன' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில், கடந்த, 2003ல் நிர்வாகப்பணிகள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டன. அந்தந்த பேரூராட்சி மன்ற தீர்மானத்தின் படி, தற்காலிக அடிப்படையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் பணியமர்த்தப்பட்டனர். பேரூராட்சிகளின் வரவு, செலவு அறிக்கை, வளர்ச்சிப்பணிகள், வாக்காளர் பட்டியல், வரியினங்களை பதிவேற்றுதல் உள்ளிட்ட ஒட்டு மொத்த நிர்வாகப் பணிகளும், இவர்கள் வாயிலாகவே கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நிர்ணயம் செய்யும் குறைந்தபட்ச சம்பளம், இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.'தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைக்க துவங்கினர். கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் சிலர் கூறியதாவது: கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களாக, ஒவ்வொரு வரும், 23 முதல், 25 வயதில், கடந்த, 23 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்திருக்கின்றனர். ஆட்சிக்கு வரும் அரசுகள், 'பணி நிரந்தரம் செய்யப்படும்' என நம்பிக்கை அளிப்பதன் விளைவாக, தொடர்ந்து தங்களின் பணியை செய்து வருகின்றனர்; ஆட்சிகள் மாறுகிறதே தவிர காட்சிகள் மாறவில்லை. 'தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களுக்கான பணி நிரந்தர அறிவிப்பு, விரைவில் வெளியாகும்' என, சில நாட்களுக்கு முன்பு கூட தகவல் வெளியானது; ஆனால், இதுவரை எந்தவொரு அறிவிப்பும் இல்லை. தற்போதுள்ள தி.மு.க., அரசும், பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்திருந்தது. விரைவில் சட்டசபை வரவுள்ள நிலையில், அதற்குள்ளாக எங்களுக்கான பணி நிரந்தர உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை