தீக்குளிக்க முயன்றவருக்கு நிபந்தனை ஜாமின்
அன்னுார்: அன்னுார் அருகே போயனுாரை சேர்ந்தவர் பிரகாஷ், 38. ஆட்டோ டிரைவர். இவருக்கும் கஞ்சப்பள்ளியைச் சேர்ந்த பிரபாவதி என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரகாஷ் நேற்று முன்தினம் மதியம் அன்னுார் போலீஸ் ஸ்டேஷன் முன் தனது உடலில் டீசல் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை மீட்டனர். தற்கொலைக்கு முயன்றதாக ஒரு வழக்கும், பிரபாவதியின் காசோலையில் மோசடியாக தொகை எழுதி, மிரட்டியதாக ஒரு வழக்கும் பிரகாஷ் மீது பதிவு செய்யப்பட்டன. பிரகாஷ் கைது செய்யப்பட்டு அன்னுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பத்து நாட்களுக்கு தினமும் கோர்ட்டில் கையெழுத்திட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அவருக்கு ஜாமின் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.