குப்பையை ரோட்டில் வீசுவோருக்கு மாநகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ்
கோவை: மாநகராட்சி பகுதியில், பொது இடங்களில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அவற்றை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கின்றனர். திறந்தவெளியில் குப்பை கொட்டுவோர் யார்; எந்தெந்த பகுதியில் இருந்து வருகின்றனர்; அப்பகுதிக்கு துாய்மை பணியாளர்கள் செல்வதில்லையா, தொழிலாளர்கள் சென்றாலும் ரோட்டில் வந்து குப்பையை போடுவது ஏன் என, கண்காணித்து ஆய்வு நடத்துகின்றனர். பின், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மூலமாக சம்பந்தப்பட்டோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அதே தவறை செய்தால், அபராதம் விதிக்கப்படும் என்கிற எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படுகிறது. வ.உ.சி., மைதானம் மற்றும் நேரு ஸ்டேடியத்தை சுற்றியுள்ள வணிக வளாக கடைகள் சிலவற்றில் சேகரமாகும் குப்பையை, ஓரிடத்தில் சேகரித்து வைக்காததால், பரவிக்கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்நிறுவனத்தினருக்கு மாநகராட்சி சார்பில் வழங்கிய நோட்டீஸில், 'உங்கள் வணிக நிறுவனத்தின் முன் இரவு நேரங்களில் குப்பையை பெருக்கி, வெளியே சிதறிக் கிடப்பதற்கு புகைப்படம் மற்றும் காணொலி ஆதாரம் இருக்கிறது. அவற்றை அகற்றி, ஒரு பையில் சேகரித்து, உங்கள் வளாகம் முன் ஓரத்தில் வைக்க வேண்டும். இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும். முதல் தடவை என்றால் ரூ.500, இரண்டாவது தடவை ரூ.1,500, மூன்றாவது தடவை ரூ.5,000 என வசூலிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.