ரோட்டுக்கு வந்த கவுன்சிலர் தி.மு.க., பெண் கவுன்சிலர் போராட்டத்தால் பரபரப்பு
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, வார்டுக்கு எம்.பி., ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என, வலியுறுத்தி, தி.மு.க., பெண் கவுன்சிலர், திடீரென ரோட்டில் மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஆனைமலை பேரூராட்சியில் மொத்தம், 18 வார்டுகள் உள்ளன. அதில், ஏழாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சாந்தி. இவர், நேற்று திரவுபதி அம்மன் கோவில் ரோட்டில், திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.அப்போது, கவுன்சிலர் கூறியதாவது:நான்கு ஆண்டுகளாக, ஏழாவது வார்டில் தெருவிளக்கு, சாக்கடை வசதி, ரோடு வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும் மேம்படுத்தவில்லை. என் வார்டில் மட்டும் வளர்ச்சி பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைவாக உள்ளது.அதே நேரத்தில் மற்ற வார்டுகளுக்கு, 50 லட்சம் முதல், 80 லட்சம் ரூபாய் வரை மேம்பாட்டு பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. என் வார்டில் தான், 18 வார்டுகளின் குப்பையும் கொட்டப்படுகின்றன. மேலும், அரசு நடுநிலைப் பள்ளியில் கழிப்பறை வசதியில்லை. மாணவர்கள், இயற்கை உபாதைகளை கழிக்க ரோட்டுக்கு செல்லும் அவலம் நீடிக்கிறது.எம்.பி., ஈஸ்வரசாமி, வார்டுக்கு வந்து பார்வையிட்டு, அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.இதையடுத்து, அங்கு வந்த பேரூராட்சி அதிகாரிகள், போலீசார், கவுன்சிலரிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.இச்சம்பவத்தால், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தொடர்ந்து, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, கவுன்சிலரிடம் மனுவை பெற்று, ஆய்வு செய்து, பணிகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களே பேரூராட்சி தலைவராகவும், எம்.பி.,யாகவும் உள்ள சூழலில், அந்த கட்சியை சேர்ந்தவரே வளர்ச்சிப்பணிகளை செய்து தரவில்லை எனக்கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.