சமூக வலைதளங்களில் கோவில் குறித்து அவதுாறு; அறநிலையத்துறை எச்சரிக்கை
பொள்ளாச்சி; குருநெல்லிபாளையம் மாரியம்மன், விநாயகர் மற்றும் சுப்ரமணிய சுவாமி கோவில் குறித்து, சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா அறிக்கை:கிணத்துக்கடவு குருநெல்லிபாளையம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், மாரியம்மன், விநாயகர் மற்றும் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு துறையின் சார்பில் ராசு என்பவர் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.கோவிலுக்கு சொந்தமான, 25.36 ஏக்கர் நிலப்பரப்பு, குருநெல்லிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த நிலத்தை கோவில் பூசாரிகள் அனுபவித்துக்கொண்டு, கோவிலுக்கு எந்தவித திருப்பணிகளையும் செய்யாமலும் வளர்ச்சிக்கு பாடுபடாமலும், தங்களது சுய லாபத்திற்காக பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், அறங்காவலர், கோவில் நிலத்தின் வருமானம் குறித்து பூசாரிகளிடம் கேள்வி கேட்கவே, பிரச்னை எழுந்தது. கிணத்துக்கடவு தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, தினசரி பூஜை முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டது.இதையடுத்து, கோவில் நிர்வாகம் வாயிலாக அந்த நிலத்தை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனை அறிந்து, பூசாரி சுப்பிரமணியம், அவரது மகன் வைத்தீஸ்குமார் ஆகியோர் கோவில் நிலத்தை அனுபவித்து வருவதை, இந்து சமய அறநிலையத்துறை எந்த விதத்திலும் இடையூறு செய்யக்கூடாது எனக் கோரி,பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், அவர்கள் சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பியும் வருகின்றனர். பக்தர்களிடையே எவ்வித வேறுபாடும் கண்டறியப்படுவதில்லை. கோவிலில் ஜாதிய வேறுபாடுகள் உள்ளதாக வெளியிட்டுள்ள செய்தி பொய்யானது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்.இவ்வாறு, அறிக்கையில் உள்ளது.