தினமலர் - பட்டம் மெகா வினாடி-வினா போட்டி: கில்லி போல் பதில் சொல்லி அசத்திய மாணவர்
கோவை : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நேற்று நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் உடனுக்குடன் பதிலளித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் 2018ம் ஆண்டு முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டுக்கான 'வினாடி வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் கடந்த, 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. நேற்று ராமநாதபுரம், அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் வினாடி-வினா நிகழ்ச்சி நடந்தது.தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வில், 50 மாணவியர் பங்கேற்றனர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'இ' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவி அனன்யா, ஐந்தாம் வகுப்பு மாணவி அவந்திகா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் அனிதா ஜான் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். தமிழ் ஆசிரியை ரஞ்சிதம், ஆங்கில ஆசிரியை மோனிஷா ஆகியோர் உடனிருந்தனர். வி.சி.வி., சிசு வித்யோதயா
ரேஸ்கோர்ஸில் உள்ள வி.சி.வி., சிசு வித்யோதயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், 164 பேர் பொது அறிவுத்தேர்வு எழுதினர்.இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதில், முதலிடம் பிடித்த 'ஏ' அணியை சேர்ந்த பிளஸ்2 வகுப்பு மாணவியர் சத்விகா, தீக்ஷா ஆகியோருக்கு, பள்ளி முதல்வர் நளினி, துணை முதல்வர் கலைவாணி ஆகியோர் பரிசுகள் வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார், தமிழ் ஆசிரியர்கள் மணிமேகலா, சசிகலா ஆகியோர் உடனிருந்தனர்.