விழிப்புணர்வு பதாகைகள் வழங்கல்
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தனியார் பங்களிப்புடன் பல்வேறு சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், ஜோதிநகர் சாந்தி பள்ளி நிர்வாகம் வாயிலாக, மருத்துவ பிரிவுக்கு தேவையான விழிப்புணர்வு பதாகைகள் வைக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, இன்ட்ராக்ட் கிளப் மாணவர்கள், 30 விழிப்புணர்வு மற்றும் அறிவிப்பு பலகைகள், 100 ஸ்டிக்கர்களை, மருத்துவமனை வசம் ஒப்படைத்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, அதனை பெற்றுக் கொண்டார். நகராட்சி கவுன்சிலர் சாந்தலிங்கம், நோயாளி நலச் சங்க உறுப்பினர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மருத்துவமனை சார்ந்த அறிவிப்புகள், சுகாதாரம், துாய்மை பாதுகாப்புக்கான அறிவிப்புகள், நோய் தடுப்பு முறைகள், பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த அறிவிப்புகள் பதாகைகளில் இடம் பெற்றுள்ளன.