இடநெருக்கடியில் டி.என்.ஏ., ஆய்வகம்; தடயவியல் துறையினர் தவிப்பு
கோவை; கோவை மண்டல தடயவியல் துறை கடும் இடநெருக்கடிக்கு நடுவில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிதாக அமையவுள்ள டி.என்.ஏ., ஆய்வகத்திற்கும் பழைய அறைகளே புதுப்பிக்கப்படுவதால், மேலும், இடப்பற்றாக்குறை அதிகரித்துள்ளன.ரேஸ்கோர்ஸ் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் அமைந்துள்ள, வட்டார தடய அறிவியல் ஆய்வகத்திற்கு, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த குற்ற வழக்குகள் தொடர்பான தடயவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.தடயவியல் பிரிவின் கீழ், நஞ்சியல் பிரிவு, போதை பொருள் பிரிவு, மதுவிலக்கு பிரிவு, கணினி தடயவியல் உள்ளிட்ட ஏழு பிரிவுகள் செயல்படுகின்றன. தற்போது, கூடுதலாக டி.என்.ஏ., ஆய்வகம் மற்றும் குளிர்பதன அமைப்பு 7.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன.இதுகுறித்து, மாதிரிகள் சமர்ப்பிக்க வந்த போலீசார் சிலர் கூறியதாவது:கோவை மண்டல தடயவியல் துறையில் போதுமான இடவசதி இல்லை. 2021ல் மதுக்கரையிலும், கடந்த ஓராண்டுக்கு முன்னர் கருமத்தம்பட்டி பகுதியிலும், புதிய இடம் இறுதிசெய்யும் தருவாயில் அனுமதி கிடைக்கவில்லை.இந்நிலையில், புதிய டி.என்.ஏ.,ஆய்வகமும் இடநெருக்கடிக்கு நடுவில் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடும் இடம் நெருக்கடி உள்ள சூழலில், செரோலஜி, பயாலஜி ஆய்வகங்களையும் ஒரே அறைக்கு மாற்றி, டி.என்.ஏ., ஆய்வகத்திற்கு பழைய மூன்று அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.விதிமுறைப்படி, டி.என்.ஏ., ஆய்வகம் அமைக்க, 6000 சதுர அடி இடம் தேவை. ஆனால், அந்த அளவுக்கு இட வசதியும் இங்கு இல்லை. டி.என்.ஏ., ஆய்வகத்திற்கு ஒரு வழி பாதை மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் அந்த நிலை இல்லை.இடநெருக்கடி அதிகரித்து, முதல் தளத்தில் உள்ள நீர் பகுப்பாய்வுத்துறையினருக்கும், தடயவியல் துறையினருக்கும் பிரச்னைகள் எழுந்துள்ளன. மாதிரிகளை கொண்டுவரும் போலீசாருக்கு காத்திருப்பு அறை என்பது இல்லை; நீண்ட தொலைவில் இருந்து வந்து, அமர கூட இடம் இன்றி வெளியில் காத்திருக்கின்றோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.