உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்ணின் வயிற்றில் இருந்த 2.7 கிலோ கட்டி அகற்றம்: அரிய வகை ரத்தப்பிரிவு இருந்தும் சாதித்த மருத்துவர்கள்

பெண்ணின் வயிற்றில் இருந்த 2.7 கிலோ கட்டி அகற்றம்: அரிய வகை ரத்தப்பிரிவு இருந்தும் சாதித்த மருத்துவர்கள்

அவிநாசி: அவிநாசி அரசு மருத்துவமனையில் அரிய வகை ரத்தப் பிரிவை கொண்ட பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டியை அகற்றி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களை பலர் பாராட்டினர். கோவை, நேரு நகரை சேர்ந்த வீரக்குமார் மனைவி ராஜலட்சுமி, 41. கடந்த 2 மாத காலமாக வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. அவிநாசி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் ராஜலட்சுமியின் கர்ப்பப்பையில் 2.7 கிலோ எடையுள்ள கட்டி இருந்ததை அறிந்து, அகற்ற முடிவு செய்தனர். ஆனால், அவரது ரத்த வகை, 'ஓ பாசிடிவ் - பாம்பே' ரத்த பிரிவை சேர்ந்ததாக இருந்தது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இது குறித்து தகவல் அளித்தனர். தமிழகம் முழுவதும் இந்த ரத்த வகையில் உள்ள நபர்களை கண்டறிந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒருவர் இதே ரத்த வகையில் இருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 'ஓ பாசிடிவ் பாம்பே' ரத்த பிரிவு ஒரு யூனிட்டை தானமாக பெற்று உடனடியாக ஆம்புலன்சில் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அதன்பின், 17ம் தேதி, அவிநாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கண்ணன் மஹராஜ் தலைமையில், டாக்டர் ரம்யா, அருண் பாபு, பிரியங்கா, சித்ரப்பிரியா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். கட்டி முழுவதுமாக கர்ப்பப்பையுடன் அகற்றப்பட்டது. மருத்துவ அலுவலர் கண்ணன் மஹராஜ் கூறுகையில், ''இந்தியாவில், ஆயிரத்துக்கும் குறைவானவர்களே இந்த வகை ரத்தப் பிரிவை கொண்டவர்கள் உள்ளனர். அதிலும், தமிழகத்தில், மொத்தம் 105 பேர் மட்டுமே இந்த அரிய வகை ரத்த பிரிவை கொண்டுள்ளனர். உடனடியாக ரத்தம் கிடைக்க பெற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்துள்ளோம். ஆரோக்கியமாக முழு உடல் நலத்துடன் ராஜலட்சுமி வீடு திரும்பினார்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ