‘வண்டி ஓட்டும்போது போன் பேசாதீர்கள்’
போத்தனூர்: போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில், ரயில் கல்யாண மண்டபம் அருகே, போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, போத்தனூர் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., உதயகுமார் தலைமையில் நடந்தது. அப்போது அவர், ‘‘இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இரண்டு பேருக்கு மேல் செல்லக்கூடாது. கார் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிவது முக்கியம். வாகனங்களை ஓட்டும்போது போனில் பேசக்கூடாது. கண்டிப்பாக பேசவேண்டும் எனில், வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு பேசலாம்,’’ என்றார். தொடர்ந்து அவ்வழியே ஹெல்மெட் இன்றி வந்தவர்களுக்கு, அதனை அணிவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. எஸ்.ஐ. ராஜேஸ், எஸ்.எஸ்.ஐ., அருள்துரை, செட்டிபாளையம் செல்லும் வழியிலுள்ள லட்சுமி நாராயணா கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.